Sunday 19 July 2020

அன்பு மட்டுமே

நம் அன்றாட வாழ்வில் தாய், தந்தை, சகோதரன், சகோதரி, கணவன்,  மனைவி, நண்பர்கள் மற்றும் குழந்தைகள் மீதும், அவர்கள் நம் மீதும் பாசமும் அன்பும் பொழிந்து வாழ்ந்து கொண்டிருப்பினும், மனிதனின் ஆழ்மனதில் தூய்மையான அன்பிற்கான ஏக்கம் எழுகிறது. அன்பின் இந்த வெவ்வேறு வடிவங்களின் பிறப்பிடமாக விளங்கும் இறைவனின் பூர்ண அன்பை நோக்கியே நம் மனமானது ஏங்கி தவிக்கிறது. மனிதனின் வாழ்வை நெறிப்படுத்தி, பிற உயிர்களை ரட்சித்து, உலகத்தை தெய்வீகமயமாய் மாற்றும் வல்லமை பெற்ற இந்த தூய பரிசுத்த அன்பு நிறைந்த இறை அருளில் மூழ்க சிறந்த வழிமுறைகளை யோகதா சத்சங்க சொசைட்டியின் தலைவர், ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தரின் சீடரான ஸ்ரீ தயா மாதா அவர்கள் “அன்பு மட்டுமே” என்னும் புத்தகத்தில் மிக எளிமையாக கூறியுள்ளார். இந்த ஆன்மீக படைப்பினூடே நிரம்பி வழியும் அன்பின் சில துளிகளை இங்கு பகிர்கிறோம்.

இறைவனின் அருளை பெறுவது எப்படி 
இறை பேராற்றல் இப்பிரபஞ்சம் முழுவதும் நிரம்பியுள்ளது. எனவே, அவரை தேடி நம் உலக வாழ்வை துறந்து, காடுகளுக்கோ, மலைகளுக்கோ அல்லது மறைவான குகைகளுக்கோ செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நம் வாழ்வில் எந்நேரமும் இறைவனின் இருப்பை உணரச் செய்யும் மாசற்ற ஆழ்ந்த பக்தி, திடமான தியானப் பயிற்சி மற்றும் சுயநலமின்றி தன் கடமையை ஆற்றும் கர்ம யோகம் ஆகியவற்றின் மூலம் இறைவன் நம்மை எங்கு இருத்தி இருக்கிறாரோ, அங்கேயே அவரை ஈர்க்க வேண்டும். சுருங்கக் கூறின், நாம் நமது செயல்பாடுகளான உண்ணுதல், உறங்குதல், உழைத்தல் ஆகிய அனைத்திலும் பொது ஆதாரமான இறைவனை கண்டிப்பாக சேர்த்து கொள்ள வேண்டும்.
“எந்தன் மகானே, எழுவாய், நீ எழுவாய்
 தியானம் செய்யவில்லை நீ, மனங்குவிக்கவில்லை
 மற்றும் காலம் கழித்தாய் வீண்பேச்சில்.
 எந்தன் மகானே எழுவாய், நீ எழுவாய்
 மரணம் உன் வாசலில்,
 உனக்கின்னும் நேரமெங்கே
 உன் ஆன்மாவை மீட்க.
 எந்தன் மகானே, எழுவாய், நீ எழுவாய்!”
                                            -ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தர்

தூய்மையான பக்தி
கடவுளை அறிவதற்து மிக சிறந்த வழி பக்தி தான். பக்தி மார்க்கத்தில் பயணிக்கும் பக்தன், இறைப் பேராற்றலை உணர்ந்து, அவர் வெளிப்படுத்தும் குணங்கள் தன் சொந்த அனுபவமாக மாற கீழ்குறிப்பிட்டுள்ள பண்புநலன்களை கடைபிடிக்க வேண்டும்.
1. ஆன்மீக வழியில் செல்ல கடவுளை அடைய வேண்டுமென்று ஒவ்வொரு நொடியும் விடாப்பிடியான, உண்மையான தீவிர ஏக்கம் தேவை. இத்தகைய ஏக்கம் இன்றி இறைவனை அடைவது அசாத்தியம்.
2  பக்தன் இறைவனை தீவிரமாக தேட தொடங்கும் போது, அவன் அந்த தேடலுக்கு ஒரு பாதையையும், அந்த பாதையில் அவனை வழிநடத்தி செல்ல ஒரு குருவையும் காண்கிறான். பக்தன் தன் குருவிடம் விசுவாசத்துடனும், அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும். ஏனேனில், குருவின் மனம் என்றும் பிரபஞ்ச பேரன்பனிடம் நிலைப் பெற்று, ஆழ்ந்து இருக்கிறது. குருவிற்கு அவருடைய சிஷ்யர்களால் அளிக்கப்படும் பக்தி அனைத்தையும், அவர் இறைவனுக்கு அற்பணிக்கிறார். அவர் ஒரு பக்தனுடைய மனத்தை தன் பக்கம் திருப்பாமல், பரம பிதாவை நோக்கி செலுத்துகிறார்.
3. தெய்வீக நண்பனை வெற்றி கொள்வதற்கு நம் பகுத்தறிவை உபயோகப்படுத்துவதற்கு பதிலாக அவரை நேசிக்க பழக வேண்டும். நம் வாழ்வின் கடினமான நேரங்களில், இறைவன் நம்மை கை விட்டு விட்டார் என்று தவறாக எண்ணும் போது, நாமும் பதிலுக்கு அவரை கைவிட்டுவிடும் அளவிற்கு நமது அன்பு வலுவற்றதாக இருக்கக் கூடாது. நிபந்தனையற்றதும் முடிவற்றதுமான அன்பையே இறைவனுக்கு கொடுக்க சம்மதிக்க வேண்டும், அத்துடன் உலகத்தில் உள்ள மற்றவர்களுக்கும் அதனை கொடுக்க பழக வேண்டும்.
4.  பக்தன் பணிவுடன் இருக்க இடைவிடாமல் முயல வேண்டும். பணிவு என்பது தயை, கருணை மற்றும் இறையருள் ஆகிய வெள்ளங்கள் வந்து சேரக்கூடிய பள்ளத்தாக்கு போன்றது. அகங்காரம் எல்லா நேரத்திலும் நான், நான் என்ற உணர்வு வறண்ட பாலைவனத்தின் மலை உச்சியைப் போன்றது. அது போன்ற சிகரத்தில் எந்த நீரும் வந்து சேர முடியாது.
5.  ஆன்மீக பாதையில் செல்லும் போது, பலவீனமானவர்களை, அவர்களுடைய எதிர்மறை தன்மையை பெரிதுபடுத்தவோ, அதைரியப்படுத்தவோ செய்யாமல், அவர்களுக்கு எழுச்சி ஊட்டும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். நம் உள்ளத்தில் உணரும் ஆன்மீக குணநலன்களை மனசாட்சியுடன் வெளிப்படுத்தி, இறைவழிக்கு செல்வதற்கு மற்றவர்களை ஊக்குவிக்க வேண்டும்.
6. பக்தி பகவானுக்காக மட்டுமே, பிறரை கவர்வதற்காக அல்ல. சில பக்தர்கள் தன் சிறு பக்தி உணர்வை மற்றவர்கள் முன்னிலையில் அவர்களை கவர்வதற்காக மிகவும் பகட்டாக வெளிப்படுத்துவர். இவ்வாறு வெளிப்புறக் காட்சியாக்குவதால், அவர்கள் தன் உண்மையான பக்தி உணர்வை இழந்து விடுகிறார்கள்.
7. முயற்சியை கைவிடாத பாவியே ஞானியாவான். இறைவன் பக்தனிடம் இருந்து தீவிர முயற்சியை எதிர்பார்க்கிறார். பக்தன் மனந்தளர்ந்து முயற்சியை கைவிட்டு ஓடிப்போவதை அவர் ஒருபோதும் விரும்பவில்லை. நம் அனைத்து செயல்களுக்கு மத்தியிலும், மற்றும் எல்லா இன்னல்கள் மற்றும் சோதனைகளினூடே அரம்பத்திலிருந்து முடிவு வரை இறைவன் நம்மோடு இருக்கிறார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தியானத்தின் இன்றயமையாமை
இறைவனின் ஞானம், அமைதி, அன்பு, மகிழ்ச்சி ஆகிய முத்துக்களை பெறுவதற்கு தியானம் என்னும் கடலில் ஆழமாக மூழ்க வேண்டும். இறை பேரன்பனை நம் ஐம்புலன்கள் வழியாக அடையமுடியாது, புத்தியின் பன்னிரண்டு அங்குல வரம்புக்குள் அளக்க முடியாது. தன் உடலை அசைவற்று இருத்தி, ஐம்புலன்களை அடைத்துவிட அறிந்து கொள்ளும்போது, உள்ளுணர்வு என்னும் ஆறாவது அறிவு வெளிப்பட்டு இறைவனை அறியச் செய்கிறது. தியானத்தில் அமரும்போது அனைத்து உடல் மற்றும் மனச்சுமைகளையும், சஞ்சலங்களையும் மனத்திலருந்து அகற்ற முயல வேண்டும். தேகத்தையும், சுயவிருப்பத்தையும் மறக்க வேண்டும்.

தியானத்திற்கு அமரும் பொழுது காலத்தை பற்றிய அனைத்து உணர்வையும் கடந்து மேலெழ வேண்டும். நாம் ஐந்து நிமிடம் தியானம் செய்தாலும், அந்த ஐந்து நிமிடங்கள் நூறு விழுக்காடு இறைவனுடன் ஒன்றியிருத்தல் வேண்டும். ஆழ்ந்து அமைதி, பேரானந்தம், இறையன்பு ஆகிய ஊற்றுகள் மெதுவாக நம் உணர்வு நிலையை நிரப்பும் வரை செல்ல வேண்டும்.

தியானம் செய்ய தொடங்கும் போது சிறு சிறு முன்னேற்றங்களில் கூட திருப்தியுற்று இருக்க வேண்டும். ஆரம்ப காலங்களிலேயே உயர்ந்த அனுபவங்களை எதிர்பார்க்காதீர்கள். உங்கள் உணர்வு நிலையின் ஆழத்தில் எழும் சாந்த உணர்வாகிய உள்ளுக்குள் உறையும் இறைவனின் மிகச் சிறிய கண நேர தோற்றத்துடன் திருப்தி அடையுங்கள். சிலர் ஆழ்ந்து தியானம் செய்யமுடியாத காரணங்களில் ஒன்று அவர்கள் ஓர் ஆனந்தமான அனுபவத்தை ஆவலுடன் எதிர்பார்ப்பது தான். மேலும் அவர்கள் இறைவனிடம் இருந்து உடனடியான பதிலை உணர முடியாத போது, மனம் தளர்கிறார்கள். இறைவன் நம்மை இந்த முறையில் தான் சோதிக்கிறார். பக்தன் தன்னிடம் காட்டுகின்ற அன்பும், அவர்களுடைய ஏக்கமும் நிபந்தனையற்றது என சந்தேகத்திற்கிடமின்றி இறைவன் உறுதிபடுத்தி கொள்ளும் வரை அவர் தன் பக்தனிடம் வருவதில்லை.ஒரு நாளில் இருபத்தி நான்கு மணிநேரத்தில் இறையன்பனுக்காக ஒரு மணி நேரம் தியானத்தில் செலவிடுங்கள்.

தியானத்தின் நற்பலன்கள்
1. மனிதனின் உணர்வு நிலை அவனுள்ளேயே இருக்கும் பரமாத்மாவுடன் நிலைபெற்று இருக்கிறது என அறிய தொடங்குகிறான். எனவே, மனிதன் எவ்வாறு நீர் நிரம்பிய குடமானது ஒலி எழுப்பாதோ அவ்வாறு மிகவும் அமைதியாக மாறுகிறான்.
2. மாறுதலற்ற தத்துவம் இறைவன் மட்டுமே, மற்றவை எல்லாம் மாறுதலுக்கு உட்பட்டவை. திடமாக, நிரந்தரமாக காணப்படும் உடல் மற்றும் இந்த உலகம் முழுவதும் பிரபஞ்ச கனவு காண்பவராகிய இறைவனின் உறைந்த எண்ணங்கள் மட்டுமே. இந்த உலகத்தை விட்டு நம் மனத்தை அகற்றி எல்லையற்றவனின் மீது செலுத்தும் அக்கணமே, அந்த பேரண்ட பரம்பொருளின் தனித்தன்மை பொருந்திய வெளிப்பாடுகளாக நம்முடைய ஆன்மாக்களின் இயல்பு நிலையை உணர தொடங்குகிறோம்.
3. கடவுள் அன்பு, அமைதி, ஞானம், ஆனந்தம் என்றால், அவனுடைய பிரதிபிம்பமாக படைக்கப்பட்டிருக்கும் நாமும் அதே இயல்புடையவர்கள் என்பதை அறிகிறோம்.
4. ஆழ்ந்து தியானம் செய்யும் போது நமது உணர்வுநிலை விரியத் தொடங்குகிறது. இந்த சிறிய ஊனுடலை மறந்து, எல்லா உயிர்களிலும் பரமாத்மாவை காணும் ஓர் ஏக்கம் எழுகிறது. மனித இனத்திற்கு சுயநலமற்ற சேவை செய்யும் ஆசை பிறக்கிறது.

கர்ம யோகம்
கர்ம என்றால் செயல் என்று பொருள்படும். கர்ம யோகம், சுயநலமற்ற செயல்பாட்டின் மூலம் சிறிய தான் ஐ இறைவனுடன் இணைக்கும் பாதையாகும். இவ்வுலகில் இறைவனை அடைய எது சரியானதோ, எது நல்லதோ, எது ஆக்கபூர்வமானதோ அதை செய்ய எப்போதும் முயல வேண்டும். நீங்கள் எதை செய்கிறீர்களோ அதை கடவுளுக்காகவே செய்வதாக எப்பொழுதும் நினையுங்கள். ஒவ்வொருவருக்கும் இறைவனாலும், கர்மவினை விதிப்படியும் அவர் கடந்த பிறவியில் செய்த வினைகளின் பலன்கள் மூலமாகவும் கொடுக்கப்பட்ட, அவர் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் உண்டு. அவர் அந்த பொறுப்புகளை தட்டி கழிக்காமல் இறைவனுடைய ஞானம் மற்றும் வழிகாட்டுதலில் முழு நம்பிக்கை வைத்து, அவரால் இயன்ற அளவு சிறப்பாகச் செயல்புரிந்து நிறைவேற்ற வேண்டும். ஒருவன் தனக்காக செயல்படும்போது, அவன் தன்னுடைய சிறிய அகந்தையுடன் தன்னையே அடையாளப்படுத்தி கொள்கிறான். ஆனால் அவன் எல்லாவற்றையும் இறைவனிடம் ஒப்படைத்துவிடும் பொழுது, அவன் பரமாத்மாவுடன் தனது உள்ளார்ந்த ஒருமையை உணர்கிறான். இறைவனிடம் தன்னையே முழுமையாக ஒப்படைக்கும் போது மட்டுமே கர்ம யோகத்தின் பூர்ணத்துவத்தை அடைய முடியும்.

தியானத்திற்கும் கர்ம யோகத்திற்கும் இடையேயான சச்சரவு
இறைவனை ஆழ்ந்து நாடுபவனுடைய மனத்தில் அடிக்கடி எழுகின்ற கேள்வி சேவைக்கும் தியானத்திற்கும் உள்ள தொடர்பு என்ன? என் கடமை எங்கு உள்ளது? ஆக்கபூர்வமான செயலிலா அல்லது தியானத்திலா? இறுதியாக பார்க்கும் போது தியானம் தான் செயலின் மிக சிறந்த வடிவம். ஆகையால் ஒரு பக்தனின் மற்ற கடமைகள் அதன் பலனாக சிறிது பாதிக்கப்பட்டாலும் தியானம் புறக்கணிக்கப்படக்கூடாது. இறைவன் செயலுள்ளவர் மற்றும் செயலற்றவர் ஆகிய இரண்டுமாக உள்ளவர். அவருடைய செயலின்றி படைப்பு இருக்க முடியாது. அதே நேரத்தில், எல்லா படைப்புகளுக்கும் அப்பாற்பட்ட முழுமுதலாக இருக்கும் அவர் நிரந்தரமாக அசைவற்று உள்ளார். நாம் அவருடைய பிரதிபிம்பமாக படைக்கப்பட்ட ஆன்மா எனில்- அவரை விட ஓர் இம்மியளவும் குறைவில்லாமல் நம் இயல்பும் கூட, வேலை செய்தல் மற்றும் சும்மா இருத்தல் ஆகிய இரண்டும் ஆகும். இறைவனை அறிய விரும்பும் ஒவ்வொரு மனிதனுடைய குறிக்கோளும், இவ்விரண்டு குணங்களையும் அவனுடைய வாழ்க்கையில் எவ்வாறு இணைப்பது என்று கற்று கொள்வதாகும்.

தயா மாதாவின் அன்பும் ஆசியும் நிறைந்த இவ்வாசகங்கள், நம்மை இறைவனின் மிக அருகில் கொண்டு செல்லும் அளவு சக்தி வாய்ந்ததாக அமைந்துள்ளது. இதுவே அவரின் திடமான ஆழ்ந்த ஆன்மீக வாழ்வை பறைசாற்றுகிறது. இத்தகைய பேறுபெற்ற புண்ணிய ஆன்மாவின் வார்த்தைகளை படிக்க நாம் எத்தனை பாக்கியம் செய்துள்ளோம்!
இவ்வமுத மொழிகளை படிப்பதோடு மட்டும் நில்லாமல், நம் வாழ்வின் அங்கமாய் மாற்றி பயன் பெறுவோம்.
ஹரி ஓம்!

(ஆன்மீக எழுச்சிக்கு வித்திடும் இப்படைப்பின் முழு பிரதியையும் படிக்க  விழையும் அன்பர்களுக்கு ஏதுவாக அப்புத்தகத்தின் முகப்பட்டையின் புகைப்படம் இணைத்துள்ளோம்)